2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணி வரவு- செலவுத் திட்டத்தை எதிர்;த்து வாக்களித்தது.
என்றாலும் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார்.
கூட்டணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் பிரதித்தலைவர்களின் தன்னிச்சையான போக்கை கண்டித்து கூட்டணியை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கூட்டணியின் முடிவுகளும் கலந்துரையாடல்களும் வெளிப்படைத்தன்மையுடன் இல்லையென வேலுகுமார் வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளராக இருந்த சந்ரா சாப்டர் அண்மையில் பொது செயலாளர் பதவியை இராஜாமான செய்திருந்தார். மனோகணேசனுடன் ஏற்பட்ட முறுகல்கள் காரணமாகவே அவர் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகிருந்தன.
பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினராக தாம் உள்ளதால் பொது செயலாளர் பதவியை தமக்கு வழங்குமாறு வேலுகுமார் கோரியுள்ளதாகவும் அதற்கு மனோகணேசன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவருடன் நெருக்கமான ஒருவரை பொது செயலாளர் பதவிக்கு நியமிக்கும் முயற்சியில் மனோகணேசன் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
மனோகணேசனின் இந்த தன்னிச்சையான முடிவுகளால்தான் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதாகவும் எதிர்காலத்தில் மூன்று தலைவர்களை தவிர வேறு எவரும் கட்சியில் மிஞ்சப் போதில்லையென வேலுகுமார் எச்சரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேலுகுமார் அண்மையில் சந்தித்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அறிய முடிகிறது. அத்துடன் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஐ.தே.க மற்றும் இ.தொ.காவுடன் இணைந்து எதிர்கால அரசயில் பயணத்தை வேலுகுமார் மேற்கொள்ள கூடுமெனவும் அறிய முடிகிறது.
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் படித்த மற்றும் உயர் கௌரவம் கொண்டவர்களை கட்சியின் தலைமை வளரவிடுவதில்லையென கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. அதன் ஒரு வெளிபாடாகதான் வேலுகுமாரின் வெளியேற்றம் உள்ளதாகவும் முன்னதாக திலகராஜும் இதனால்தான் வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வேலுகுமார்,
நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும். ஆக தனக்கு வந்தால் ரத்தம், மற்றையவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி எனக் கூறித்திரிபவர்களுக்கு அது புரியாது என தெரிவித்துள்ளார்.
‘ஜெனிவா’ தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணைவரும்போது, ‘நடுநிலை’ வகிக்கும் நாடுகள்கூட ‘எதிர்’ போக்கையே கடைபிடிக்கின்றன என்று அரசியல் பாடம் எடுப்பவர்களுக்கு, தற்போது ‘நடுநிலை’ என்பது மாறி விளங்குவது ஏன்? இது அரசியலில் எந்த டிசைனை சாரும்?
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் உள்ளன என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள், இப்படியான இழிநிலை அரசியலில் ஈடுபடுவது இயல்பு. இதனை திருத்திக்கொண்டு, மக்கள் பக்கம் வரவேண்டும் என்றே நான் வலியுறுத்தியுள்ளேன்.
ஒன்றும், ஒன்றும் மூன்று எனக் கூற முற்படுபவர்களுக்கு நடுநிலைகூட ஆதரவாக தெரியலாம். அது பற்றி எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
N.S