எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க கரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சன்சந்த ஜனதா சபையின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1965 ஆம் ஆண்டு பிறந்த அச்சிகே பாட்டலி சம்பிக்க ரணவக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மின் பொறியியலாளர் ஆவார். 2007 ஆம் ஆண்டு தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சராகவும் பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டு மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பின்னர் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும் பணியாற்றினார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் போது திறமையான அமைச்சராக அவர் தனித்து நின்றதுடன், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உயர் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.
தேசிய ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவராக செயற்பட்ட இவர் தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரியாக முன்வைக்கப்பட வேண்டிய பலம் வாய்ந்த வேட்பாளர் ரணவக்கவே என்றும் ரணவக்கவின் ஆதரவாளர்கள் முகநூல் சமூக ஊடகங்களில் சமூக ஊடகப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதாகக் காணப்படுகின்றது.