வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணம் அரச அச்சக அலுவலகத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகம் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அச்சிடும் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபா பெறப்பட்டிருக்க வேண்டியதாகவும், ஆனால் இதுவரை 40 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்க அச்சக அலுவலகம் கடந்த 8ஆம் திகதி நிதியமைச்சிற்கு அறிவித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.
இதன்படி, வாக்குச் சீட்டு அச்சிடும் பணியை இதுவரை மீள ஆரம்பிக்க முடியவில்லை என தெரிவித்த கங்கானி, அதற்கான பணிகளை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 200 மில்லியன் ரூபா அரசாங்க அச்சக அலுவலகத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அடுத்த வாரத்தில் அரசாங்க அச்சக அலுவலகத்திற்குத் தொகை கிடைத்தாலும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் மீண்டும் ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகி வருகின்றது.
ஏனெனில் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் வாக்கு சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் பெறப்படாவிட்டால், மார்ச் 28 ஆம் திகதி தபால் வாக்குகள் அளிக்கும் பணியை தொடங்க முடியாது. தற்போது, மார்ச் 21 முதல் அந்தந்த மையங்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட ஏற்பாடாகி உள்ளது.