தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினம் (15) நாடுதழுவிய
பணிப்பகிஷ்கரிப்பை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் , மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி , கல்வி நிர்வாகம் , நில அளவை திணைக்களம் , வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர்.
அதிகரிக்கப்பட்டுள்ள வரி திருத்தப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது. மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கத்தினரும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று (15) முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், நிலைய அதிபர்கள் சங்கம், புகையிரத கடவை காவலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளன.
பல புகையிரத தொழிற்சங்கங்களுடன் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், புகையிரத பொது முகாமையாளர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
N.S