மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்படுவது தொடர்பாகவும் குறித்த பாடுகள் தற்போது இருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் மீனவ சமாசத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த பாடுகள் அளந்து வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்ததன் நிமித்தம் இந்த பாடுகள் அளக்கப்படுவதாக நாங்கள் அறிகிறோம்.
இருந்தும் இந்த பாடுகள் அளக்கப்படுவதற்கு பின் இருக்கும் திட்டங்கள் குறிப்பாக கர வலைப்பாடுகள் அளந்து கரை வலை செய்யும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் இப்போது பாடுகளில் ஊடாக கரையோரங்களில் தங்களது தொழில்களை மேற்கொள்ளும் சங்கத்துக்கு அப்பாற்பட்ட அல்லது சங்கத்தில் பதிவில்லாத நபர்களுக்கு இந்த இடங்களை அளந்து அவர்கள் சட்டவிரோத செயல் பாடுகளை செய்வதற்கு அதாவது கடல் அட்டை பண்ணைகளையும் மீன் வளர்ப்பு திட்டங்களையும் அதற்கப்பால் தடை செய்யப்பட்டிருக்கின்ற குறிப்பாக கற்பிட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவை படகு களை இங்கு கொண்டு வந்து தொழில் செய்வதற்கு திரைமறைவிலான வேலையாக திணைக்களம் இதில் உள்வாங்கி திணைக்களம் சார்பாக சில திட்டங்களை முன்வைப்பதன் நிமித்தம் இந்த பாடுகள் அளக்கப்பட்டு அங்கு இருக்கும் படகுகளை இங்கு கொண்டு வந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பை அந்த தனி நபர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டமாக உள்ளது என சங்கங்கள் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடல் தொழில் திணைக்களமும் பிரதேச செயலாளர் அவர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பாடுகள் இவ்வாறு மீனவர்களுக்கு வழங்கப்படுமாக இருந்தால் கரைவலை பாடாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் சங்கங்களின் அந்த கிராம மட்டங்களில் உள்ள சங்கங்களுக்கு வழங்கப்படுமாய் இருந்தால் நாங்கள் அதை வரவேற்போம்.
அதற்கு அப்பால் இருக்கும் செல்வாக்கு செலுத்துகின்ற தனி நபர்களுக்கு அல்லது பண்ணை அமைப்பாளர்களுக்கு இதை வழங்குவதை நாங்கள் முற்று முழுதாக நிராகரித்து நிற்கின்றோம்.
எனவே எதிர்காலத்தில் இந்த பாடுகள் அளக்கப்பட வேண்டும். உரிய கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்படவேண்டும்.
அதற்கு அப்பால் அந்தந்த கிராமங்களில் இருக்கின்ற சங்கங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் கருத்துக்கு அமைவாகவும் அளந்து பங்கிடப்படவேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்றோம்.
இந்த பண்ணை வளர்ப்பின் ஒரு செயற்பாடாக குஞ்சு அட்டைகளை கடலில் பிடித்து அங்கு கடலட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக கடந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதித்து இருந்தோம்.
மேலும் கடலட்டை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
இந்த அட்டைகள் மேலும் ஒரு நபர்களுக்கான தொழிலாக உள்ளது. எனவே 6 மாதத்தில் வளர்ந்து அதன் பெறுமதியை 3,000-க்கு மேற்பட்டதாக இருக்கும் அட்டைகளை வெறும் குஞ்சட்டைகளாக பிடித்து 50 -60 ரூபாய்க்கு பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கான அட்டைகள் இவ்வாறு பிடிக்கப்பட்டு இந்த பண்ணையாளர்களுக்கு விற்கப்படுகிறது.
இன்னொரு பண்ணையில் பொறித்த குஞ்சுகளை பிடித்து பண்ணையில் வளர்ப்பது தான் இத்திட்டம்.அதை விடுத்து கடலில் உள்ள குஞ்சு அட்டைகளை பிடித்து பண்ணையில் வளர்ப்பதற்காக தனி நபர்கள் உழைப்பதற்காக இந்த கடல் அட்டை குஞ்சுகளை பிடிப்பதை சமாசம் என்ற ரீதியில் நாங்கள் முற்றுமுறையாக இதை எதிர்த்து நிற்கின்றோம்.
பிரதேச மட்டக் கூட்டத்தில் இது சம்பந்தமாக நாங்கள் காரசாரமாக எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தோம். எனவே அந்த கூட்டத்தில் அவ்வாறான குஞ்சு அட்டை பிடிப்பதை நாங்கள் தடுப்போம் என்று அங்கிருந்த திணைகள் அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.
இருந்தும் அவர்கள் கூறியதற்கு அடுத்த நாள் குஞ்சு அட்டை பிடிக்கும் சம்பவங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு கண்மூடித்தனமாக கண்ணை மூடிக்கொண்டு திணைக்களங்கள் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.