இன்று கூடுகிறது பாராளுமன்றம், பல்டிகள் சில அரங்கேறும் என்று பேச்சு!

0
149

2024ம் புத்தாண்டிற்கான முதலாவது பாராளுமன்ற சபை அமர்வு இன்று (09) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவினால் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, இன்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் 2355/30 வர்த்தமானியின் கீழ் விவாதம் நடத்தப்பட உள்ளது.

நீதிமன்றம், நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனத்தை அவமதிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பாக 2023 நவம்பர் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஜனவரி 10 ஆம் திகதி இரண்டாம் நாள் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வியாழன் அன்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளை முன்வைப்பதற்கு 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (09) பாராளுமன்றத்தில் மாற்றங்கள் சில ஏற்படவுள்ளதாக அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாகவும் மேலும் சிலர் நிமல் லான்சா தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர் அணி மாறத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த வதந்திகள் பொய்யானவை என்றும், சில தரப்பினரால் பரப்பப்படும் தீய வதந்திகள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவற்றின் உண்மையும் பொய்யும் இன்னும் சில மணித்தியாலங்களில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here