மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தனது ராஜினாமா கடிதத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குக் கீழ் இருந்த மூன்று நிறுவனத் தலைவர்கள் முன்னர் பதவி விலகினர்.
இவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன, போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் இலங்கை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் டாக்டர் பந்துல திலீப விதாரண ஆகிய அதிகாரிகள் ஆவர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகத்தின் ராஜினாமாவுடன், போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிஷாந்த அனுருத்த வீரசிங்கவின் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியாக இருக்கும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் பதவிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.