முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆகியோர், குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்பு வரும் 3ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷிரந்தி ராஜபக்ஷ “சிரிலிய சவியா” திட்டம் தொடர்பான விசாரணைக்காக விளக்கமளிக்க அழைக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கு முன் வழங்கப்பட்ட திகதியில் ஆஜராக முடியாது என தெரிவித்து, வேறு திகதி கோரியிருந்ததாகவும், அதன்படி வரும் 3ஆம் நாள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷ அதே நாளில் காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு எதிராக உள்ள புகார் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.
