தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் திகதி ஒரே கட்டமாக நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இன்று மாலை 4 மணியளவில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 111 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
திமுக 66, அதிமுக 57 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் 4718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விசில் சத்தம் ஓங்கி ஒலித்ததால் அவர் சரிவை சந்தித்தார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அவரால் முன்னிலையை அடைய முடியவில்லை.
இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளார்.
4718 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றிபெற்றுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.
கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து தேர்தலிலும் வெற்றி (திமுக) பெற்று வந்தார்.
தற்போது முதல் முறையாக 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1996 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
அதேபோல் முதலமைச்சராக இருந்து மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
இதேவேளை அதிமுக கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
