தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்த நேரத்தில் வரி நிர்வாகத்தையும் குற்றச்செயல்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நிலைக்கு தள்ளி வருவதாகவும், ஒருவரால் மறந்து போனது, உடல்நலக் குறைவு, வெளிநாடு சென்றிருத்தல் போன்ற நோக்கமற்ற அலட்சியங்களால் வரி நிர்வாக நிபந்தனைகளை பின்பற்றாததை கூட குற்றச்செயலாகக் கருதும் வகையிலான வரி நிர்வாகத்தை அரசு கொண்டு வர முயற்சிக்கிறது என்றும், இது அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், “சிறையில் அடைப்போம்” என்ற அச்சுறுத்தலின் மூலம் வரி வசூலிப்பது ஜனநாயக விரோதமான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், வரி நிர்வாகம் தொடர்பாக வரி நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இந்த துறையுடன் தொடர்புடைய பிற தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் எதிரானதோடு, அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், வணிக சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக புதிய தொழில்கள் உருவாகுவதும், உள்ள தொழில்கள் விரிவடைவதும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த புதிய வரிக் கொள்கை நீதித்துறையின் அதிகாரத்திற்கே சவாலாகும்
மேலும், அரசின் இந்த விதிமுறைகள் நீதித்துறையின் அதிகாரத்திற்கே சவால் விடுப்பதோடு, அரசியலமைப்பையும் மீறுவதாகவும், கட்டுப்பாடு மற்றும் சமநிலை என்ற கொள்கையையும், ஜனநாயகத்தின் மூன்று முக்கிய அமைப்புகளான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவையும் பாதிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
இது ஜனநாயகத்திற்கு கொடுக்கப்படும் மரண அடி
இந்த சந்தர்ப்பத்தில், வரி செலுத்த வேண்டிய அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி தவிர்ப்பு நடைபெறக்கூடாது என்றும், வரி வலையில் உள்ள அனைவரும் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஒரு குற்றச்செயலாகக் கருதி நடத்துவது ஜனநாயகத்திற்கு கொடுக்கப்படும் மரண அடி என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
