வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் பெரும் உயிர்ச்சேதமும் பெரிய அளவில் பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்க 44 சதவிகித வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது வெனிசுவேலாவில் தேசிய விடுமுறை கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது, எனவே பல மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்திருக்கலாம். நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:04 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் கராகஸுக்கு மேற்கே அமைந்துள்ள மொண்டால்பான் பகுதியில் இருந்தது.
வெனிசுவேலாவின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
நாட்டின் பல மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
“அனைத்து அறிகுறிகளும் இதன் தீவிரம் ஏழை விட மிக அதிகமாக இருந்ததைக் காட்டுகின்றன” என அவர் விடிவியுடன் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.
