இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக மகளிர், சிறார் விவகாரத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு, கடத்தலுக்கு எதிரான அனைத்துலக நாளை முன்னிட்டு நடைபெற்ற தேசிய போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார்.
போதையில்லாச் சமூகத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ‘ஒன்றிணைந்த நாடு’ எனும் தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின்கீழ், மறுவாழ்வுப் பணியகம் அப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துகொண்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி, “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாவதால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்களும் பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் போதையிலிருந்து மீட்டெடுக்க பெருமுயற்சி தேவை,” என வலியுறுத்தினார்.
