இலங்கையில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதற்கு தற்போதைய அரசின் செயலிழப்பே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தினமும் சுமார் 1,000 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகின்றனர். தற்போது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது. இதுவரை 32 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. நிர்வாக மாவட்டங்கள் 14-இலும், 538 கிராம சேவகர் பிரிவுகளிலும் டெங்கு தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்த நிலைமை குறித்து பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், பிரிட்டோ குறியீடு (Breteau Index) அபாய நிலையை எட்டியபோது அரசியல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் இன்று டெங்கு கட்டுக்கடங்காத அளவுக்கு பரவி வருகிறது.
இந்தச் சூழலில் சுகாதாரத் துறையை மட்டும் குற்றம்சாட்டுவது சரியல்ல. அதிக டெங்கு பாதிப்பு காணப்படும் மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி அமைப்புகள் செயற்பட வேண்டும். தொழிலாளர் உரிமைகள் குறித்து பெருமையாகக் குரல் கொடுத்த கடுவெல மேயர், இன்று கடுவெலையை மிகவும் அசுத்தமான நகரமாகவும் டெங்கு பரவும் மையமாகவும் மாற்றியுள்ளார். உள்ளூராட்சி அமைப்புகள் செயலிழந்துள்ளன; அவற்றால் எந்தப் பணியும் செய்ய முடியவில்லை.
மாகாண சபைகள் இயங்கியிருந்தால் டெங்கு பரவலை இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாததால் அவை அமைக்கப்படவில்லை.
டெங்கு பரவலை எடுத்துக்காட்டாகக் கொண்டு சொல்வதானால், இந்த அரசு செயலற்றதும் திறனற்றதுமான அரசாகும். வெறும் பேச்சுகளிலேயே ஈடுபடுகிறது. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சிறப்பாகச் செய்கிறது; அது அதிகார மையப்படுத்தல், அடக்குமுறை மற்றும் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியாகும்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராடுவோம். டெங்கு என்ற ஆபத்தையும் தோற்கடிக்க வேண்டும்; அதேபோல் தொழிற்சங்கங்களை ஒடுக்க முயலும் இந்த அரசையும் தோற்கடிக்க வேண்டும். டெங்கு மனிதர்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிக்கிறது; அதைப் போலவே தற்போதைய அரசு உழைக்கும் மக்களின் உரிமைகளையும் பறித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகளை அவர் நேற்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வெளியிட்டார்.
