டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பொதுமக்கள் தங்களுக்கான பொறுப்புகளை முறையாக நிறைவேற்றாததே என ஊடகத் துறை துணை அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்:
“இலங்கையில் தற்போது அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்றாததே என்று நாம் கருதுகிறோம். அரசாங்கம், குறிப்பாக மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் பொதுப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. ஆனால் உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பாகும். எனவே, இதை ஒரு தேசிய கடமையாகக் கருதி, நாட்டின் நலனுக்காக உங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுங்கள். உங்கள் வீடும் சுற்றுப்புறமும் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.”
பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று (29) ஹோமாகம பகுதியில் நடைபெற்ற பக்தி கீத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே துணை அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
