Thursday, May 2, 2024

Latest Posts

தமிழ் மக்கள் மீது மீண்டும் ஆயுதங்களை திணிக்க வேண்டாம்

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும். இந்தச் சட்டத்தால் மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கே உள்ளாக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டு சிவஞானம் சிறீதரன்,

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட 44 ஆண்டுகள் நெருங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். ஜே.வி.பியின் 60ஆயிரம் வரையிலான போராளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வரலாறு ஒரு இரத்தம் படிந்த வரலாறு ஆகும். உலகத்துக்கும் இந்த செய்தியைதான் இதன் வரலாறுகள் கூறியுள்ளன. பலமுறை இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக அரச தலைவர்கள் கூறினார்கள். ஆனால், இவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை.

தற்போதைய நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ளார். ஆனால், இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை. இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு இன்றுவரை என்ன நடந்ததென தமிழ் மக்கள் தெரியாதுள்ளனர். அவர்களது உறவுகள் இன்றும் நீதிக்காக போராடுகின்றனர்.

அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் பல போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இதனை கண்கண்ட சாட்சியங்களும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகள் சரணடைந்தனர்.

இணைந்து இருந்த வடக்கு, கிழக்கை ஜே.வி.பி வழக்குத் தொடுத்து பிரித்தது. இதனால் கண்ட பயன் என்ன?. அதன்மூலம் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட்டதா?. அல்லது நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டனவா?. இலங்கையின் சட்டங்கள் சிங்கள பௌத்தத்தையும் முன்நிறுத்தும் சட்டங்களாகவே உள்ளன.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் இன்னமும் ஆழமான விவாதங்கள் வேண்டும். இதன் உள் உடல்களை மாற்றுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகிடைக்காது. அதில் முழுமையான மாற்றங்கள் அவசியமாகும். சர்வதேச நாடுகளை ஏமாற்றவே இங்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்கின்றனர்.

நாட்டில் புரையோடியோயுள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க எந்தவொரு சிங்கள தலைவரும் தயாராக இல்லை. மற்றுமொரு இனத்தை அழிக்கும் வகையிலான சட்டங்களே கொண்டுவரப்படுகின்றன. மாறாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்கள் அல்ல இவை.

மீண்டும் இளைஞர்களை கைதசெய்யவும் படுகொலைகள் செய்யவுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. என்றார்.

சிறீதரனின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர்,

அல்பிரட் துரையப்பா இந்து கோவிலின் உள்ளே கொல்லப்பட்டது இந்த சட்டத்தின் மூலமா? 100 இற்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் கொன்றுக்குவித்தது இந்தச் சட்டத்தின் ஊடாகவா?. தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் தலைமையை வழங்கக் கூடிய பல தலைவர்கள் இருந்தனர்.

லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற தலைவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வரக் கூடிய சூழ்நிலை இருந்தது. அவர் உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவராக இருந்தார்.

அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வம் போன்றோரை படுகொலை செய்தது யார்?. தலதா மாளிகைக்கு குண்டு வீசி அங்கிருந்த அப்பாவி மக்களை படுகொலை செய்தது யார்?. காத்தான்குடியில் முஸ்லிம்களை படுகொலை செய்தது யார்?. இவற்றை அனுமதிக்கின்றீர்னளா?. தீவிரவாதிகளை ஒழித்தமைதான் குற்றமா?.

கட்டுநாயக்கவில் விமானங்களை குண்டு வெடிப்பில் பிரபாகரன் தகர்த்தார். இது நல்ல விடயமா?. ரயில்கள், பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இவை நல்ல விடயங்களா?. தீவிரவாதத்தை ஒழிக்க ஏதாவது பணியை செய்தால் அதனைதான் இவர்கள் தீமையான விடயம் என்று கூறுகின்றனர்.

ஆனந்த சங்கரி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய முக்கியமான ஒரு தலைவராகும். அவரது வெள்ளவத்தை வீட்டில் புலிகள் தாக்குதல் நடத்திய போது அவர் எனது வீட்டுக்குதான் ஓடிவந்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் அழைத்துச் சென்று அவருக்கு பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தேன். அந்த பாதுகாப்புதான் இன்றும் அவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவரது மகன் கேரி ஆனந்த சங்கரி கனடாவில் புலிகள் நல்லவர்கள் என பிரசாரம் செய்து வருகிறார்.

பங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டதால்தான் இன்று நீங்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றீர்கள். சிறந்த தலைவர்களை பிரபாகரன் கொன்றொழித்தமையால்தான் உங்களை போன்றோர் பாராளுமன்றம் வர முடிந்தது. அதனால் முட்டாள்தனமான கருத்துகளை கூற வேண்டாம். உங்களை போன்றோர் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை. நீங்கள்தான் தமிழ் மக்களின் சாபம் என்றார்.

நீதி அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த சிறீதரன் எம்.பி.,

பிரபாகரன் இருந்த தருணத்தில் இந்த பாராளுமன்றத்தில் 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தற்போதைய நிலையை ஒருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும். 1954ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் தந்தை செல்வநாயகம் அகிம்சை வழியில் போராடிய போது அந்தப் போராட்டத்தை குண்டர்களை கொண்டு தாக்கியது யார்? திருகோணமலை கந்தளையில் 184 விவசாயிகளை வெட்டிக்கொன்றது யார்?. அப்போது ஆயுதங்கள் இருந்தனவா?.

பிந்துநோயா மற்றும் வெளிக்கடை சிறையில் தமிழ் கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, தங்கமணி படுகொலை செய்யப்பட்டார்கள். இவை அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் செய்யப்பட்டன. கொக்கட்டிசோளை, நவாலி என பல இடங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆயுங்களை நாங்கள் விரும்பி தூக்கியவர்கள் அல்ல. ஆயுதங்கள் எங்கள்மீது திணிக்கப்பட்டது என பிரபாகரன் கூறியிருந்தார். ஆகவே, மீண்டும் ஆயுங்களை திணிக்க வேண்டாம் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.