உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் அலி சப்ரியுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜெய்சங்கர், இலங்கையின் அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இலங்கையின் மீட்சியை எளிதாக்குவதற்கு செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
“மற்றவர்களுக்காகக் காத்திருக்காமல், சரியானது என்று நாங்கள் நம்புவதைச் செய்ய இந்தியா முடிவு செய்தது. இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கினோம்.
இது இலங்கையின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது மட்டுமன்றி, அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் சமமாக கையாளப்படுவதை உறுதிசெய்யும் என்று இந்தியா நம்புகிறது, என ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
இந்தியாவுடனான கூட்டாண்மை இலங்கையின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கடிதம் ஒன்றை அவர் கையளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவை நினைவுகூர்ந்த ஜெய்சங்கர், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் மாகாணத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் முக்கியமானவை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
“நல்லிணக்கத்திற்கான நீடித்த முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்து பிரிவினரின் நலன்களுக்காகவும் உள்ளன” என்றும் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
“இந்தியா இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி, இலங்கை தேவையை உணரும்போது கூடுதல் மைல் செல்லத் தயாராக உள்ளது” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ என்ற கொள்கைக்கான அர்ப்பணிப்பு பற்றிய கொள்கை என்பதை வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் இந்த நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இந்த கடினமான தருணங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இந்த நேரத்தில் தனது விஜயத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் விளக்கினார்.
N.S