அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையில் (CID) விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
“எங்களை இங்கு அழைத்து வந்து அச்சுறுத்துவதால் எங்களின் குரலை அடக்க முடியாது. அதனால், தயவுசெய்து நிலக்கரி தொடர்பான மோசடி குற்றச்சாட்டு, பாடசாலை 6ஆம் வகுப்பு மாணவர்களின் சிந்தனையை பாதிக்கும் முயற்சிகள், மேலும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக கூறி அவர்களை ஏமாற்றிய விவகாரம் போன்ற விடயங்கள் பற்றியும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் நாங்கள் மௌனம் காக்கப் போவதில்லை,” என அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் செயலிழப்பை மறைக்க பொலிஸாரை பயன்படுத்துகின்றனர் என்றும், “நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்படுவாரா இல்லையா என்பதை பாராளுமன்றத்தில் பேசும் 15 பேரின் கருத்துக்களை கேட்டாலே புரிந்து கொள்ள முடியும்” என்றும் அவர் கூறினார்.
