Saturday, May 4, 2024

Latest Posts

ஜகத் வெள்ளவத்த இலங்கைக்கான இத்தாலி தூதுவர் பதவியை ஏற்றார்

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2022 பெப்ரவரி 18ஆந் திகதி ரோமில் உள்ள பலாஸ்ஸோ டெல் குய்ரினாலேவில் வைத்து இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா அவர்களிடம் நற்சான்றிதழ் கடிதஙகளைக் கையளித்தார்.

நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூதுவர் ஜகத் வெள்ளவத்த, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்பான வாழ்த்துக்களை ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா, இத்தாலியக் குடியரசின் அரசாங்கம் மற்றும் மக்களுக்குத் தெரிவித்தார்.

நற்சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டவுடன், தூதுவர் ஜகத் வெள்ளவத்த ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவுடனானகலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன் போது இலங்கை மற்றும் இத்தாலிக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு தூதுவர் வெள்ளவத்த தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

இலங்கை மற்றும் இத்தாலியின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பெருமளவிலான இலங்கையின் புலம்பெயர் சமூகங்களின் தாயகமாக இத்தாலி விளங்குவதாக தூதுவர் வெள்ளவத்த சுட்டிக்காட்டினார். கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது சமூகத்தின் நலனில் விஷேட கவனம் செலுத்தியமைக்காக, குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களை இத்தாலியில் விருந்தளித்தமைக்காக இத்தாலிய அரசாங்கத்திற்கு தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகள், கலாச்சாரம், வர்த்தகம், முதலீடு, தொழிலாளர் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் தற்போதுள்ள உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கான தனது பணியை தூதுவர் வெள்ளவத்த வெளிப்படுத்தினார். இலங்கைப் பணியாளர்களின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான பயிற்சி வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இத்தாலிய அதிகாரிகளின் ஆதரவை நாடும் அதே வேளையில், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்டு கல்வித் துறையில் ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை தூதுவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் போது, இத்தாலியில் பெருமளவிலான புலம்பெயர் இலங்கையர்கள் இத்தாலியில் பல்வேறு துறைகளில் பிரசன்னமாகியிருப்பதும், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இத்தாலியின் ஆதரவை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

தூதுவர் வெள்ளவத்த சமூகவியல் துறையில் ஒரு கல்வியாளராவார். அவர் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சமூகவியலின் சிரேஷ்ட விரிவுரையாளராக கல்வி வாழ்க்கையில் தேசியக் கொள்கையை இயக்கும் திறனில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், சமூகவியலின் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். தேசிய அளவில் கொள்கை உருவாக்கம் வரை தனியார் துறைக்குள் உயர்மட்ட தீர்மானம் மேற்கொள்ளலை உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் ஒத்துழைத்த அனுபவமும் அவருக்கு உள்ளது.

தூதுவர் வெள்ளவத்த 1987 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்றார். அவர் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவரது முந்தைய மதிப்புமிக்க பதவிகளில் இலங்கை காப்புறுதிக் கூட்டுறவுத் தலைவர், அரச அடமானம் மற்றும் முதலீட்டு வங்கியின் தலைவர், தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோப்பரேஷன் பி.எல்.சி.யின் பணிப்பாளர், கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர் ஆகியன உள்ளடங்கும். மேலும், அவர் பல்வேறு பாடங்களில் பல கல்விக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சமூகவியலில் பல நூல்களையும் எழுதியுள்ளார். தூதுவர் வெள்ளவத்த ஷாலிகா பெர்னாண்டோ என்பவரை மணந்து 4 பிள்ளைகளைக் கொண்டுள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

ரோம்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.