தற்போதைய அரசாங்கம் நாட்டை எந்தளவு மோசமான நிலைமைக்கு தள்ளியுள்ளது என்றால் 2019 இல் தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த ‘சுபிட்சத்தின் தொலை நோக்கு’ கொள்கை பிரகடன விஞ்ஞாபனத்தை குப்பி விளக்கு வெளிச்சத்திலேயே வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த துர்பாக்கியம் நிறைந்த ஆட்சியை உடன் விரட்டியடிக்க வேண்டும் என்றும் அதனை பாராளுமன்ற கட்சி தாவல்களின் ஊடாக முன்னெடுக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,அதற்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பும் நோக்கும் வேலைத்திட்டமும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்சி தாவல்களின் ஊடாக அன்றி இந்நாட்டு மக்களின் முன்னிலையில் சென்று ஆட்சியை மாற்றுவேன் என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், எல்லாவற்றையும் விட மக்களின் வாக்குகளே அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அமைச்சர்களை மாற்றி வருவதாகவும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுக்கு அமைச்சர்களை மாற்றுவதன் ஊடாக பதிலை தேட முடியாது என்றும் அவர் சுட்டிகாட்டினார்.
அரசாங்கம் வந்ததில் இருந்து இதுவரை செய்தது தன்னிச்சையாகவும் தூர நோக்கற்ற வகையில் செயற்பட்டு நாட்டை மோசமான நிலைமைக்கு தள்ளியது மாத்திரமே என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் கட்சி தாவல்களின் மூலம் அதனை மாற்ற முடியாது என்றும் செய்ய வேண்டியது முழுமையாக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியதே எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்றினைந்த தொழிற்சங்கங்களின் ஒன்றான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு இன்று(05) எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில் பதுளையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், தோட்ட தொற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,எதிர்க்கட்சியிலுள்ள பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தாங்குவது மாத்திரமின்றி அந்த போராட்டத்தை வெற்றியுடன் முடிக்கும் வல்லமை கொண்டது என்றும் தெரிவித்தார்.
நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மிகை கட்டண வரி விதிப்பை தோற்கடிக்க தொடர்ந்து போராடிய ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடி மக்களின் உரிமையை பெற்றுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் ஓய்வூதியர்களுக்கு ஆப்பு வைக்க நினைத்த அரசாங்கம் இறுதியில் வரி விதிப்பை மீளப்பெற்றுக் கொண்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.