புதையல் தோண்டுவதற்காக சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த லான்ட் க்ரூஸர் வாகனுத்துடன் விமானப்படை கோப்ரல் உட்பட இருவரை வெடி பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி பாலையடிவட்டை வீதியில் இன்று அதிகாலை 3. மணியளவில் பயணித்த லான்ட் க்ரூஸர் வாகனத்தை பொலிசார் சந்தேகத்தில் நிறுத்திய போது அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் அமோனியா ஒரு கிலோ, ஜெல்கூறு ஓன்று, வெடிக்கான கயிறு , 3 போத்தல் கெமிக்கல்கள் என்பவற்றை மீட்டதையடுத்து கொடக்கவில அரகம்பாவிலையைச் சேர்ந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ரோன் கமரா இயக்குநரான விமானப்படை கோப்ரல் ஹனிந்து சமரவீர, மற்றும் களனி கொல்கம்புறவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிலால் சுஜீவ ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர். லான்ட் க்ரூஸர் வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் புதையல் தோண்டும் நோக்கத்துடன் இந்த பகுதிக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.