நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக, நிதியமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை தாம் முற்றாக நிராகரித்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையை குழுவிடம் இருந்து மறைத்து, தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் அனுப்ப நிதியமைச்சின் செயலாளர் எடுத்த முயற்சியை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிதி மோசடி தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சின் செயலாளருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு நீண்ட தாமதத்திற்குப் பின்னர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில், “குழுவின் கௌரவத் தலைவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாத்திரம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.
நான் இந்நாட்டு மக்களை ஜனநாயக ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர். தற்போது அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக நான் அமர்ந்திருப்பது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துவதற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை கேட்கப்பட்டது நான் தனியாக வாசிப்பதற்காக அல்ல, நிதிக்குழுவில் சமர்ப்பித்து கலந்துரையாடுவதற்கே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த அறிக்கையை பொறுப்பேற்க மறுத்து நிராகரித்ததுடன், அதனை நாடாளுமன்றின் ஊடாகவே மீண்டும் நிதியமைச்சுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழுவிற்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் தர்க்கங்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் நாடாளுமன்ற பாரம்பரியம், தொழில்முறைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயகத்தை ஒடுக்க முயன்ற இந்த முயற்சிக்கு எதிராக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
