Saturday, July 27, 2024

Latest Posts

பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே – சிவநேசதுரை சந்திரகாந்தன்

பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

“கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் இருந்து சுமார் 12 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, கிராமிய வீதிகளையும், பாலங்களையும் அமைக்கின்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எமது அமைச்சின் ஊடாக சுமார் 65 சதவீதமான பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்து கிராமங்களுக்கு அவற்றின் பலனைக்கொண்டு சேர்ப்பதற்கு அவசியமான விடயங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

கடந்த வருடங்களில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதோடு மக்களின் வருமானத்தையும் உயர்த்தி, கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. எனவே இவ்வாறு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரமும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும்.

மேலும், தற்போது நாட்டின் அதிகமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன. எனவே வெள்ளத்தால் சேதமைடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க ஜனாதிபதி சுமார் 03 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேப்படுத்துவதற்கான பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றோம்.

முக்கியமாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை வென்று, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

அதிகமான விபத்துகள் இடம்பெறும் வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் பணிகள் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும். அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.

முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார். மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.