வடக்கு மக்கள் சஜித் பக்கமே – திஸ்ஸ கூறுகின்றார்

0
153

வடக்கில் உள்ள வாக்குகளில் 70 சதவீதம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கப்பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கில் உள்ள வாக்குகளும் தீர்மானமிக்கதாக அமையும். வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு சிறந்த நல்லுறவு உள்ளது. வடக்கில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் சஜித்துக்குச் சார்பான நிலைப்பாட்டில் உள்ளனர்.

குறிப்பாக வடக்கில் உள்ள வாக்குகளில் 70 முதல் 75 சதவீத வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கே கிடைக்கப்பெறும்.
முன்னர்தான் வடக்கில் கட்டளையின் பிரகாரமும், அழுத்தங்களின் பிரகாரமும் வாக்களிக்கப்படும். தற்போது அவ்வாறானதொரு சூழ்நிலை இல்லை. வடக்கு அரசியல் களமும் மாற்றம் கண்டுள்ளது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here