வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான வழக்கு இன்று (20) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அதன்போது, அந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் அரச இரசாயன பகுப்பாளரிடம் குறிப்பிடப்பட்ட பொருட்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், அந்த அறிக்கைகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பில் அரச இரசாயன பகுப்பாளரிடம் குறிப்பிடப்பட்ட இரத்த மாதிரிகள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பான அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதவான், அவற்றை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அரசு ஆய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்பலாம் என்றும் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, முறைப்பாட்டை வரும் 28ம் திகதிக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.