ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு உரிமையாளரான சேசுராஜா, அண்ணாமலை, கல்யாணராமன், செய்யது இப்ராகிம், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 8 மீனவர்களும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.