மறைந்த வர்த்தகர் தேசமான்ய கலாநிதி லலித் கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இடம்பெற்றதாகக் கூறி அவரது மரணத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த கொத்தலாவல கடந்த 5 வருட காலமாக குடும்ப உறுப்பினர் எவருக்கும் அனுமதி வழங்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் பிணைக் கைதியாக வைத்திருந்ததாக குடும்பத்தினர் தமது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வர்த்தகரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை பிரதான நீதவான் பார்வையிட்டார்.
சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த குடும்பத்தினர், அவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
சஞ்சீவ கொடிதுவாக்குடனான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ், தொழிலதிபரின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியது என குடும்ப உறுப்பினர்கள் கருதுவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக கொத்தலாவலவுடன் இருந்த ஒரு குழுவினர் தங்களுக்குப் பெறுமதியான சொத்துக்களை மோசடியான முறையில் எழுதிக் கொடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.