டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர், அதிக பணவீக்க நிலைமைகளின் போது, எமது நாடு உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளில் ஐந்தாவது நாடாக நமது நாடு பட்டியலிடப்பட்டிருந்தது. இது ஒரு தீவிரமான சூழ்நிலை. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பட்டியலில் இருந்து இலங்கையை குறித்த பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.
நமது நாட்டில் 95% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 60% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம் 70% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 50%க்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்த நிலைமைகள் மூலம் பல சிரமங்களை எதிர்கொண்டு மிக விரைவாக தன்னை மீட்டெடுக்கும் ஒரு நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும். எதிர்வரும் டிசம்பரில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என்றும் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
N.S