மொட்டுவின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து நேற்று பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு மல்பாறையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கட்சி காரியாலயத்தில் இவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதில் கலந்து கொண்டிருந்தார்.
இதில், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் இதனால் ராஜபக்சர்களின் செல்வாக்கு இந்த தேர்தலில் கடுமையாக சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.