லட்ச ரூபாய் மதிப்பிலான பழமையான விஷ்ணு ஐம்பொன் சிலையை கடத்த முயன்ற இருவரை கைது செய்துள்ள போலீசார், அந்த சிலை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் அப்பகுதிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால், அதையும் தாண்டி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்காலத்து ஐம்பொன் விஷ்ணு சிலையை கடத்த முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி, திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியில் இருந்து இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்துவதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமையான ஐம்பொன் சிலை சிக்கியது. மேலும், அதனை ஏரல் அருகே உள்ள கொற்கையைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகியோர் வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பழமையான விஷ்ணு ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்ததுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சிலை கடத்தல் தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சிலை கடத்தலில் வேறு கும்பலுக்கு எதுவும் தொடர்பு உள்ளதா? இந்த சிலை எந்த கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டது? என்பவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.