இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கும் போலி தகவல் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வருவதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த போலி செய்திகளில், அமைச்சின் ஒரு அதிகாரியின் பெயரில் குறிப்பிடப்பட்டதாக கூறப்படும் வங்கி கணக்கு இலக்கமும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு எந்தவிதமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் வழங்கவில்லை என்றும், இதற்காக எந்தவித பண வசூலும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, இத்தகைய போலி செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி சில மோசடி குழுக்களால் மேற்கொள்ளப்படும் கள்ள நடவடிக்கை என்றும், இதற்கு அமைச்சுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடி தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய மோசடிகளுக்கு இரையாகாதிருக்குமாறு பொதுமக்களிடம் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக ஜீவன் குமாரதுங்க விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்திலும், இதேபோன்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் அமைச்சின் லெட்டர் ஹெட்களை பயன்படுத்திய சம்பவம் இடம்பெற்றதாகவும், அதுபற்றி முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அனுபவம் இம்முறை விசாரணைக்கு உதவியாக இருக்கும் என தற்போதைய அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
