எரிபொருள் விலை உயர்வு தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல – ஜனாதிபதி

0
38

இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்தது தனிப்பட்ட லாபம் பெறுவதற்காக அல்ல என்றும், நாட்டின் மக்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தங்கள் நுகர்வு முறைகளை மாற்றி சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“நாம் குறுகிய காலத்திற்கு மட்டுமே முன்னறிவிப்பு செய்ய முடியும். அதற்கு மேல் போர் நீடித்தால் உலகில் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. போரில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கே கூட இரண்டு மாதங்களுக்கு மேல் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என நான் நினைக்கிறேன்.

எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டில் சக்தி வழங்கலை இடையூறு இல்லாமல் தொடர்ச்சியாக வழங்க அரசு முழு பொறுப்பும் ஏற்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம். ஆனால் விலைகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம்; அது தவிர்க்க முடியாத ஒன்று.

நான் எரிபொருள் கிணறு வைத்திருப்பவன் அல்ல; அதனால் லாபம் பெறுவதற்காக விலையை உயர்த்தவில்லை. நான் எரிபொருள் நிறுவனத்தின் முகவரும் அல்ல. எந்த நிறுவனத்திற்கும் நான் பிரதிநிதி அல்ல. ஆனால் ஒரு அரசாக எரிசக்தி வழங்கலை தொடர்ந்து உறுதி செய்வது எங்கள் பொறுப்பு.

உள்ளக அதிர்வுகளை நாம் சமாளிக்க முடிந்தாலும், வெளிப்புற அதிர்வுகளை சமாளிக்க சிறிது காலம் தேவைப்படும். எனவே மக்கள் தங்களின் நுகர்வு பழக்கங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. உலகில் பல நாடுகள் நெருக்கடிகளை இப்படித்தான் கடந்து வந்துள்ளன.

ஒரு நெருக்கடி நேரத்தில் நாம் அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். இந்நேரத்தில் மக்கள் சிக்கனமான பொருளாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இது அரசுக்கு உதவுவதற்காக மட்டும் அல்ல; நாம் அனைவரும் சேர்ந்து இந்த நெருக்கடியை கடக்க வேண்டிய பாதையாகும்,” என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி இந்த கருத்துகளை நேற்று (10) மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here