மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்நிலை காரணமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மையை பாதுகாக்க பிராந்திய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து ஒத்துழைப்பு அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அவரின் கருத்துப்படி, வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் கடல் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கும் திறம்பட எதிர்கொள்ள பிராந்திய நாடுகள் ஒன்றுபட்ட அரசியல் நோக்கத்துடன் வலுவான கலந்துரையாடல் மேடையை உருவாக்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது போல், இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளும் வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பொதுவான சவால்களை சமாளிக்க ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக அரசியல் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்கினால், அந்தப் பிராந்திய நாடுகள் தங்களின் அடையாளத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சில பிராந்திய நாடுகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துவதோடு, மறுபுறம் ஈரான் கற்ப் பிராந்திய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஒரு ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவமும் கடல்சார் பாதுகாப்பு குறித்து கவலைகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிராந்திய நாடுகள் இடையே தொடர்ச்சியான சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, மீன்பிடி, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.
அதேபோல், இலங்கை போன்ற நாடுகள் தங்களின் துறைமுகங்களையும் சேவை வசதிகளையும் மேம்படுத்தி இந்த பிராந்திய ஒத்துழைப்பில் செயற்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
