JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும் சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் பரப்பி வரும் தகவல்கள் முழுமையாக பொய்யானவை என ஜே.வி.பி. பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு எந்த அரசியல் புரிதலும் இல்லை. எந்தத் திட்டமிடலும் தெரியாது. அரசியல் ரீதியாக திசை தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால் கைக்கு எது கிடைக்கிறதோ அதைப் பிடித்துக்கொண்டு தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் சில மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல நடக்கும் நபர்கள் இருக்கிறார்கள். இரவில் தூங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் ஏதாவது ஒன்றை கற்பனை செய்து பதிவிடுகிறார்கள். பின்னர் அதை சரிபார்க்காமல் இன்னொரு குழு அதை எல்லா இடங்களிலும் பகிர்ந்து பரப்புகிறது.
யாரோ ஒருவர் ‘பெலவத்தையில் அடிதடி சம்பவம் நடந்ததா?’ என்று பதிவிட்டிருந்தார். அதையே சிலர் மாற்றி ‘என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது, நான் தற்போது வைத்தியசாலையில் இருக்கிறேன்’ என்று பரப்பியுள்ளனர். ஆனால் நான் இப்போது உங்கள் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்கிறேனே.
சாதாரணமாக ஒரு செய்தி வந்தால் அதனை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்க வேண்டும் அல்லவா? எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட எவரும் விடவில்லை. எந்த உறுதிப்படுத்தலும் இன்றி இந்த பொய்யை பரப்புகிறார்கள்.
இதில் மிகச் சிரிப்பான விஷயம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ச அணியினரும், பொதுஜன பெரமுனவின் சில முன்னாள் உறுப்பினர்களும் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு செய்தியாளர் சந்திப்புகள் நடத்துகிறார்கள். உண்மையில் இது ‘வானம் இடிகிறது’ என்று ஓடிய முயலின் கதையைப் போன்றது.
உண்மையில் அரசியல் ரீதியாக திவாலானவர்கள் யார் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. மக்கள் இப்போது இந்த தகவல் முற்றிலும் பொய் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் நம்பாத விஷயங்களை பரப்பிக்கொண்டே அவர்கள் எப்படி ஒரு அரசை அமைப்பது பற்றி சிந்திக்கிறார்கள்?” என்று அவர் தெரிவித்தார்.
