2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது ரூ. 7.8 மில்லியன் நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணரத்ன, முன்னாள் நிர்வாக இயக்குநர் ரூமி ஜாபர் உள்ளிட்டோரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு துறைக்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
2014 ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில், சுற்றுலா மேம்பாட்டு பணியக நிதியை பயன்படுத்தி 12,000 டி-ஷர்ட்கள் அச்சிடப்பட்டதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த டி-ஷர்ட்களில் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் படம் மற்றும் மறுபக்கத்தில் அரசியல் கட்சியின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவை மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் பகிரப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
