இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இலங்கை பொலிஸார் விளக்கம் வெளியிட்டுள்ளனர்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்த்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானதும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விளக்கம், கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபர், கடந்த மே 31ஆம் தேதி சாவகச்சேரி நாவற்குழியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் LTTE தொடர்புடைய பாடல்களைப் பாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த நபர் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இரண்டு பாடல்களைத் தொகுத்து (Edit செய்து) தனது சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றியிருப்பதும், அவை LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இணையத்தில் பரவச் செய்யும் நோக்கில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவான உள்ளடக்கங்கள் அவ்வீடியோக்களில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இலக்கம் 48 இன் பிரிவு 3(G) கீழ் 2026 ஜூன் 3ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அரசியலமைப்பிற்கும் நாட்டின் சட்டங்களுக்கும் அமைவாகச் செயல்பட வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
