Friday, May 3, 2024

Latest Posts

சந்தை உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முட்டைகளை இறக்குமதி செய்யும் அரசாங்கம்!

சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.முட்டையை இறக்குமதி செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தையில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கோழிப்பண்ணை சங்கங்கள் முட்டையை ரூ.55க்கு விற்க மறுத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. சந்தையில் ஒரு முட்டை 60 முதல் 70 ரூபாய்வரை விற்கப்படுகிறது.

இதனால், முட்டையை இறக்குமதி செய்து 55 அல்லது அதற்கு குறைவாக விற்க அரசு முடிவு செய்துள்ளது.

நாளாந்த முட்டை உற்பத்தியானது 8 மில்லியனில் இருந்து 3.5 மில்லியனாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

“நாம் ஒரு முட்டையை 14 அல்லது 15 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். அதன் பிறகு அவை அழுகிவிடும். முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது,” என்றார்.

இதேவேளை, ஒரு முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

“நாங்கள் விலையை உயர்த்த விரும்பவில்லை. ஆனால், தீவனச் செலவு தாண்டவமாடிவிட்டது. ஏராளமான விவசாயிகள் கடைகளை மூடிவிட்டனர். இறைச்சிக்காகவும் தங்கள் கோழியை விற்றுள்ளனர். பெரும்பாலான மக்களால் தாய் கோழிகளை வாங்க முடியாததால், தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது,” என்றார்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில், இலங்கையர்கள் சராசரியாக சுமார் 200 மில்லியன் முட்டைகளை உட்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கோழிப்பண்ணை தொழில் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை விரைவில் ஆலோசித்து, தொழில் வளர்ச்சியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நுகர்வோருக்கு அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.