மின்சார விநியோகத்தை தடை இன்றி பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பின்பற்றினால் பல பிரச்சினைகள் ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும், அந்த மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், மின் உற்பத்திக்கு பயன்படும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தில் நீர்மின் திறனும் குறையும்.
தற்போது நிலவும் சிக்கல் நிலை காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பது சிரமமாக உள்ளதென மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.