இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே சந்திப்பு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நீண்ட காலமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன் இதன்போது நினைவூட்டியதாக காங்கிரஸின் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜமாணிக்கம் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது


