Tuesday, October 22, 2024

Latest Posts

கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் – சர்ச்சையில் சிக்கிய ரோஹித

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கண்டி பிரதான வீதியிலுள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் மகனின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத நவீன காரொன்றும் ஜீப் வாகனமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1997 என்ற இலக்கத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் குறித்த சட்டப்பூர்வ ஆவணங்கள் எதையும் உரிமையாளர் சமர்ப்பிக்கத் தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் இரு வாகனங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் அமைச்சரின் மருமகன் என கூறிக்கொள்ளும் கயான் சேரம் இன்று (21) சட்டத்தரணி ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முறைப்பாடு அளிக்க வந்ததாக அவர் கூறினார்.

“நான் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன். எனக்கும், என் மனைவியின் தந்தைக்கும் எதிராக அவதூறு பிரசாரம் நடக்கிறது. அதை சரி செய்யவே முறைப்பாடு கொடுக்க வந்தேன். இரண்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. என்னையும் என் மனைவியின் தந்தையையும் அதனுடன் தொடர்புபடுத்தி குழப்ப முயற்சிக்கிறார்கள். நான் வசிப்பது கொழும்பு நகரில். வாகனங்கள் கண்டி நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த விடயத்தில் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


“இதில் ரோஹித அபேகுணவர்தன தொடர்பில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன். நான் பொறுப்புடன் சொல்கிறேன். இந்த வாகனச் சம்பவத்தில் தனக்கு எந்த வகையிலும் தொடர்பிருந்தால், நான் அரசியலில் இருந்து விலகுவேன்.நான் அரசியல் செய்வது ஏமாற்றவோ திருடவோ அல்ல. எனவே, அவ்வாறான விடயங்கள் இருப்பின் உண்மையைக் கண்டறிந்து செயற்படுங்கள் என்பதை பொறுப்புடன் தெளிவாகக் கூறுகின்றேன்.

இப்போது இது மருமகனின் சகோதரனுடையது என்று கூறப்படுகிறது. இப்போது யாராவது மருமகன் அண்ணனாக இருந்தால், அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு நானா பொறுப்பு? இது என் வீடு. இந்த வீட்டிற்கு தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள், உணவு உண்பார்கள், எங்களிடம் வாகனங்கள், பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன, ஆனால் நாங்கள் எதையும் பயன்படுத்தவில்லை.

எனவே இங்கு நான் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், எனது நண்பர்கள் யாராவது அநீதி இழைத்தாலும் ரோஹித அபேகுணவர்தனதான் அதற்கு பொறுப்பா? அப்படியென்றால் வேறு யாராவது தவறு செய்தால் அதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மிகத் தெளிவாகக் குற்றம் சாட்டவும்.

இந்த குற்றச்சாட்டில் எனக்கு தொடர்பு உள்ளதா என்பதை நிரூபித்தால் தேர்தல் வேட்புமனுவை மீளப் பெற்றுக்கொள்வேன். இதில் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்டிருப்பாரா என்பதை யாரேனும் நிரூபிக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன். நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.