இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொள்கலன் கட்டணங்களில் ஐந்து சதவிகித அதிகரிப்பு, டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் போன்ற இதர செலவுகளையும் கருத்தில் கொள்ளும் போது, இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் முதல் பசிபிக் பெருங்கடலில் இருந்து கண்டம் முழுவதும் ஏற்படவிருக்கும் எல் நினோ வானிலை காரணமாக, இந்தியா உட்பட பல நாடுகள் அத்தியாவசியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என ஏனைய இறக்குமதியாளர்களும் தெரிவித்தனர்.
காலநிலை மாற்றம், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க முறையான திட்டம் தயாரிக்கப்படாவிட்டால், அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தள்ளனர்.
