முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை அவரை தடுப்புக் காவலில் வைத்திருந்து, குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (20) சுரேஷ் சலேவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்காக, முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் கடந்த பெப்ரவரி மாதத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை குற்றப் புலனாய்வு திணைக்களக் காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
