ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வு சேவைத் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இன்று (07) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CID காவலில் இருக்கும் போது தமக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு எதிர்ப்பாக சில நாட்களுக்கு முன்பிருந்து மரணம்வரை நீடிக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இதன் காரணமாக இன்று இரவு அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஷ் சலே, 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டு தற்போது CID விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
