ஜூலை மாத இறுதியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ‘சேனல் ஐ’ அலைவரிசையை ‘லைக்கா குழுமத்திற்கு’ (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்க இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 25 மில்லியன் ரூபாவை வழங்க லைக்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் நஷ்டம் காரணமாக ‘சேனல் ஐ’ தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்க வெகுஜன ஊடக அமைச்சு முன்மொழிந்திருந்தது.
அதன்படி, பெப்ரவரி 03, 2023 அன்று டெண்டர் அழைப்பு அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது பெப்ரவரி 17 அன்று முடிவடைந்தது.
குறித்த திகதியில் இலங்கையில் உள்ள 2 பிரபல தொடர்பாடல் முகவர் நிறுவனங்கள் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.
எவ்வாறாயினும், வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் புதிய தலைவரை நியமித்த உடனேயே, ‘லைக்கா குழுமத்திற்கு’ ‘சேனல் ஐ’ குத்தகை அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சின் அனுமதியின் அடிப்படையில் இந்த குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ரூபவாஹினி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்காததால், அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய தொலைக்காட்சியின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.