குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுமென, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற தேசிய பிக்குகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி;
சட்டம் அனைவருக்கும் சமமாகவே அமல்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். சட்டம் அனைவருக்கும் சமம் என்று நாம் கூறும்போது அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றனர்.
இவர்களின் மனச்சாட்சி அவர்கள் குற்றவாளிகள் என்று நினைப்பதால்தான், இவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் கீழ், எந்த ஒரு தனிநபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கப்போவதில்லை. செப்டெம்பர் மாதம் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும்.
பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமையும்.
யாராவது ஒரு குற்றம், ஊழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
செல்வம், அதிகாரம், பதவிகள், குடும்ப வரலாறு எதுவும் பொருத்தமானதல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நாட்டில் யாராவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், ஊழலில் ஈடுபட்டிருந்தால், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், பொது நிதியை வீணடித்திருந்தால், அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். பழிவாங்கல் அல்ல. வேட்டையாடுதல் அல்ல. இந்த சமூகத்தின் சட்டம், நீதி மற்றும் நியாயத்தின் உணர்வை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்.