இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் உண்மையல்ல என அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை அத்தகைய எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்திலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கேள்வி – அச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவரை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார் என்றும், இடைக்கால நிர்வாக சபையை அமைத்து அதற்கு தலைவராக சமகி ஜன பலவேகயின் எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த முடியுமா? அல்லது இது பொய்யான தகவலா?
பதில் – “அதுகுறித்து அமைச்சரவை மட்டத்திலும் நாம் எந்த விவாதமும் நடத்தவில்லை என்பதையே நான் கூற முடியும். இதுவரை…”
கேள்வி – இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் – “இன்னும் இல்லை.”
கேள்வி – தெளிவாகச் சொன்னால், ஜனாதிபதி கிரிக்கெட் நிறுவனத் தலைவரிடம் விலகுமாறு கேட்டுள்ளாரா?
பதில் – “எனக்குத் தெரிந்த வரையில், எனக்கு கிடைத்த தகவல்களின் படி இன்னும் அப்படியில்லை. ஆனால் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், நான் முன்பும் கூறியுள்ளேன்; கிரிக்கெட் நிர்வாகம் குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் உள்ளன. நாட்டின் மக்களும் ரசிகர்களும் கிரிக்கெட்டுக்கு காட்டும் அன்பை பாதுகாத்து, கிரிக்கெட்டை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அதற்கான தீர்மானங்கள் தேவையான நேரத்தில் எடுக்கப்படும். தற்போது என்ன விவாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எனக்கு தகவல் கிடைக்கவில்லை.”
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த கருத்துகளை நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
