யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய அகழ்வுகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் வல்லுநர்களின் முன்னிலையில் இடம்பெற்ற இன்றைய அகழ்வுப் பணியின் போது, புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை தூய்மைப்படுத்தப்பட்டுக் குறியீட்டு இலக்கங்கள் இடப்பட்டன.
அத்துடன், சிறுவர்களுடைய இரு எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாவது மற்றும் இரண்டாவது தடயவியல் அகழ்வாய்வுக் களங்களில் இருந்து இதுவரை மொத்தம் 302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 298 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில் மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
