வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முந்தைய நாளில், இலங்கையின் இரு வணிகர்களால் 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகயின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது உள்துறை தகவல் கசிவின் மூலம் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என அவர் குற்றஞ்சாட்டியதுடன், அமெரிக்க டொலரின் மதிப்பு திடீரென ரூ.10 அளவுக்கு உயர்ந்ததற்கும் இதுவே காரணம் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி வாகன இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிடுகிறார். ஆனால் பிரச்சினை என்னவென்றால், ஜனாதிபதி 15ஆம் திகதி அந்த ஆவணத்தில் கையெழுத்திடுகிறார். அதே நாளில் இந்த நாட்டின் இரண்டு சர்ச்சைக்குரிய வணிகர்கள் ஒருவர் 3500 வாகனங்களையும் மற்றொருவர் 500 வாகனங்களையும் இறக்குமதி செய்ய LC திறக்கிறார்கள். 16ஆம் திகதி முதல் 50% வரி அமலாகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் அதிகாரியை சந்திக்க நான் மத்திய வங்கிக்கு வந்தேன். ஆனால் பாதுகாப்பு பிரிவினர் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. பின்னர் ‘மெயில் பாக்ஸ்’ மூலம் விண்ணப்பிக்க சொல்லுகிறார்கள். அந்த மெயில் பாக்ஸை மூன்றாம் தரப்பு நிறுவனம் கையாள்கிறது. நான் கொடுத்த கடிதத்தில் கையெழுத்திடச் சொன்னபோது, அங்கிருந்த ஊழியர்களே கையெழுத்திட பயப்படுகிறார்கள்.
இந்தக் கடிதத்துக்கும் 2.5 மில்லியன் டொலர் சம்பவத்துக்கு நடந்ததைப் போல ஏதாவது ஆகுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை டொலர் விலை ரூ.323 ஆக இருந்தது. திங்கட்கிழமை மாலை அது ரூ.334 ஆக உயர்ந்தது. டொலர் ரூ.11 உயர்ந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தபோது 4000 வாகனங்களுக்கு LC திறக்கப்பட்டிருந்தது. அவை வர்த்தக வங்கிகள் மூலம் திறக்கப்பட்டவை.
அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி கையெழுத்திட்ட அதிவிசேட வர்த்தமானியின் உத்தரவை இந்த மோசடி வணிகர்கள் முன்கூட்டியே எப்படித் தெரிந்துகொண்டார்கள்? 500 வாகனங்களை இறக்குமதி செய்த ஒருவருக்கு டெண்டர் இல்லாமல் காற்றாலை மின் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.40 பில்லியனுக்கு மேல் LC திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு டொலருக்கான செலவு ரூ.10 அளவுக்கு உயர்ந்துள்ளது. இவை மோசடிகள் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பினார்.
நிரோஷன் பாதுக்க நேற்று (19) இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கச் சென்றபோது ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
